Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

சேலம் மாவட்டத்தில் இதுவரை - 3.49 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது :

சேலம்

சேலம் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் தவணை உட்பட மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 766 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் 27 ஆயிரத்து 230 பேர், வருவாய்த்துறையில் பணிபுரியும் 1,607 பேர், காவல்துறையில் 4 ஆயிரத்து 678 நபர்கள், உள்ளாட்சித் துறையில் 4 ஆயிரத்து 319 நபர்கள், ரயில்வே பாதுகாப்புப் படையில் 254 பேர் என மொத்தம் 10 லட்சத்து 82 ஆயிரத்து 795 பேருக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதில், கோவிஷீல்டு தடுப்பூசி முதல் டோஸ் நேற்று முன்தினம் வரை, 2 லட்சத்து 22 ஆயிரத்து 932 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 21 சதவீதமாகும். இந்நிலையில், 2-வது தவணை இதுவரை 78 ஆயிரத்து 861 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது முதல் தவணையை ஒப்பிடுகையில் 35 சதவீதம் இலக்கை எட்டியுள்ளது.

இதேபோல, கோவேக்சின் முதல் தவணை நேற்று முன்தினம் வரை 39 ஆயிரத்து 187 பேருக்கு போடப்பட்டுள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 4 சதவீதமாகும். 2-வது டோஸ் இதுவரை 8 ஆயிரத்து 786 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது. இது முதல் தவணை போட்டவர்களுடன் ஒப்பிடுகை யில் 27 சதவீதம் இலக்கை எட்டியுள்ளது.

தடுப்பூசிகளில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகியவற்றில் முதல் மற்றும் 2-வது டோஸ் பயன்பாடு என்ற வகையில், சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 3 லட்சத்து 49 ஆயிரத்து 766 டோஸ் தடுப்பூசி மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனையில் 850 டோஸ், மேட்டூர், ஆத்தூர், ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை களில் ஆயிரத்து 360 டோஸ், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 5 ஆயிரத்து 700 டோஸ், மாவட்ட சுகாதாரக் கிடங்கில் 420 டோஸ் என மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 330 டோஸ் கரோனா தடுப்பூசிகள் இருப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x