Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

விளைச்சல் அதிகரிப்பால் - வீழ்ச்சியடைந்த காய்கறி விலை :

திண்டுக்கல் காய்கறி மார்க்கெட்டுக்கு வரத்து அதிகம் கார ணமாக பல காய்கறிகளின் விலை ரூ.10-க்கும் குறைவாக விற்பனையானது.

திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள கொட்டபட்டி, செட்டிநாயக் கன்பட்டி, செம்பட்டி, சின்னாளபட்டி, பெருமாள் கோயில்பட்டி, அடியனூத்து, தோட்டனூத்து உள்ளிட்ட கிராமங்களில் விளையும் காய்கறிகள் திண்டுக்கல் மொத்த மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. சில நாட்களாக காய்கறிகள் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. விற்பனையும் குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்தது. இதில் கடந்த வாரம் 1 கிலோ கத்திரிக்காய் ரூ30-க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.20-க்கு விற்பனையானது.

வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.10-க்கு விற்றது, நேற்று விலை குறைந்து ரூ.6-க்கு விற்றது. ஒரு கிலோ தக்காளி ரூ.10-க்கு விற்பனையான நிலையில், வரத்து அதிகரித்ததால் விலை பாதியாகக் குறைந்து ரூ.5-க்கு விற்பனையானது. ஒரு கிலோ ரூ.40-க்கு விற்ற பச்சை மிளகாய் ரூ.20-க்கும், முள்ளங்கி ஒரு கிலோ ரூ.10-க்கும், முட்டைக்கோஸ் ரூ.16, சுரைக்காய் ரூ.10, புடலங்காய் ரூ.12-க்கும் விற்பனையானது.

காய்கறிகளின் விலை வெகுவாக குறைந்து விற்பனை யானதாலும், ஊரடங்கு அச்சம் காரணமாகவும் பொதுமக்கள் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை அதிகளவில் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

ஆனால் மார்க்கெட்டுக்கு காய்கறிகளை கொண்டுவந்த விவசாயிகள் உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

இதுகுறித்து விவசாயி அழகுமுத்து கூறுகையில், விளைவித்த செலவு கூட கிடைக்கவில்லை. காய்கறிகள் விலை வீழ்ச்சியால் இழப்புதான் ஏற்பட்டுள்ளது. கோடைமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் செடியில் விளைந்த தக்காளிகளும் சேதமடையும் நிலையில், அவற்றை பறித்துக் கொண்டு வரக்கூட முடியாது. கரோனாவால் போதிய வருவாயின்றி இருக்கும் விவசாயிகள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x