Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM

கோடை விடுமுறை கால நீதிமன்றம் வரை - அரசு வழக்கறிஞர்கள் பணியில் நீடிக்க அனுமதி :

மதுரை

ஆட்சி மாற்றத்தால் ராஜினாமா கடிதம் கொடுத்த உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர்கள் சிலர், கோடை விடுமுறை கால நீதிமன்றம் முடியும் வரை பணியில் நீடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7-ல் முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றக் கிளையில் அதிமுக ஆட்சியில் அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கப் பட்டவர்கள் ஒவ்வொருவராகப் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். உயர் நீதிமன்றக் கிளையில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கே.செல்லப்பாண்டியன், 3 கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா கடிதத்தை அரசுக்கு ஏற்கெனவே அனுப்பி உள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதம் வாரத்தில் இரு நாள் வீதம் 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் மட்டும் நடைபெறும்.

தமிழகத்தில் புதிய அரசு மே 7-ல் பதவியேற்கிறது. பொறுப்பேற்றதும் கரோனாவை கட்டுப்படுத்த புதிய அரசு கவனம் செலுத்தும் என்பதால் அரசு வழக்கறிஞர் நியமனம் உடனடியாக நடைபெற வாய்ப்புகள் குறைவு.

இந்த சூழ்நிலையில் தற் போதைய அரசு வழக்கறிஞர்கள் அனைவரும் ராஜினாமா செய்தால், கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் தாக்கலாகும் நிலையில் தமிழக அரசு தரப்பில் உரிய பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படும்.

இதைத் தவிர்க்கும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்றக் கிளை அரசு வழக்கறிஞர்கள் சிலர் ராஜினாமா கடிதம் அளித்தபோது, கோடை விடுமுறை கால நீதிமன்றம் முடியும் வரை பணியில் தொடருமாறு தலைமை செயலகத்தில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு அரசு வழக்கறிஞர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கோடை விடுமுறை கால நீதிமன்றத்தில் முக்கிய வழக்குகள் தாக்கலாகும் நிலையில் அரசு தரப்பில் உரிய பதில் அளிப்பதில் தாமதம் ஏற்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x