Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
திருச்சி: முசிறி அருகேயுள்ள அமராவதி சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன்கள் ராஜசேகரன், சிவக்குமார், ரவிக்குமார்(32). ராஜசேகரன் அதே கிராமத்தில் தனியாகவும், சிவக்குமார் தனது தந்தை செல்லையாவுடனும் வசித்து வருகின்றனர். ரவிக்குமார் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், உடல்நலன் குன்றிய தனது தந்தை செல்லையாவை பார்த்து நலம் விசாரிப்பதற்காக சொந்த கிராமத்துக்கு ரவிக்குமார் வந்திருந்தார். அங்கு நேற்று முன்தினம் இறந்த ஆட்டை, சமைத்து உண்பதற்காக சிவக்குமார் விலைக்கு வாங்கி வந்துள்ளார். இதையறிந்த ரவிக்குமார், இறந்த ஆட்டை சாப்பிடக்கூடாது என்று சிவக்குமாரிடம் கூறியுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் நேரிட்டு, கைகலப்பாக மாறியுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த ராஜசேகரன், ரவிக்குமாரை தாக்கியுள்ளார். சிவக்குமார் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வந்து ரவிக்குமாரைத் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த ரவிக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ரவிக்குமார் உயிரிழந்தார்.
தகவலறிந்து முசிறி டிஎஸ்பி பிரம்மானந்தம் மற்றும் தாத்தையங்கார் பேட்டை போலீஸார், அமராவதி சாலை கிராமத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கொலை தொடர்பாக ராஜசேகர், சிவக்குமார் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT