Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

புதுச்சேரி வாக்காளர்களுக்கு என்.ஆர். காங். ரங்கசாமி நன்றி :

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடைபெற்ற புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பேராதரவு தந்து, வெற்றி பெறச்செய்த புதுச்சேரி மாநில வாக்காளப் பெருமக்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுச்சேரி மக்களின் அபரிதமான நம்பிக்கையைப் பெற்றுள்ள நாங்கள் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்புகள், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என்று உறுதி அளிக்கிறேன்.

முதலாவதாக தற்போது ஒரு பெருஞ்சிக்கலாக உருவெடுத்துள்ள கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதில் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவதில், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.

நாம் அனைவரும் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து இயங்கி புதுச்சேரியை புதிய வளர்ச்சி பாதையில் நடத்திச் செல்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x