Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

திருப்பூர் தொழிலதிபர் வீட்டில் - நகை, பணம் கொள்ளை வழக்கில் இருவர் கைது :

திருப்பூர் - தாராபுரம் சாலை கே.செட்டிபாளையம் மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் சபியுல்லா (53). பிரிண்டிங் நிறுவன உரிமையாளர். இவர், கடந்த 5-ம் தேதி குடும்பத்தினருடன் உதகைக்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது,இவரது வீட்டில் இருந்து 120 பவுன் நகை, ரூ. 27 லட்சத்தை மர்ம நபர்கள் இருவர் கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுதொடர்பாக சபியுல்லாஅளித்த புகாரின் பேரில், வீரபாண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

கடந்த 5-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வீட்டுக்குள் புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு 2.36 மணிக்கு அங்கிருந்து சென்றுள்ளனர். இந்நிலையில், சத்தியமங்கலம் எரங்காட்டுபுதூர் வாய்க்கால்மேட்டை சேர்ந்தபரத்குமார் (33), மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே அம்மன் நகர் அப்துல் ஹக்கீம் (31) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது, "இருவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. பரத்குமார் மீது கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 15 திருட்டு வழக்குகள் உள்ளன. 3 முறை குண்டர் தடுப்புச் சட்டத்திலும் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதேபோல, அப்துல் ஹக்கீம் மீது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 12 திருட்டு வழக்குகள் உள்ளன. 2 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தொழிலதிபர் சபியுல்லா வீட்டில் பணம், நகைகொள்ளையடித்தது தெரியவந்தது. முதல் கட்டமாக இருவரிடம் இருந்து 30 பவுன் நகை, ரூ.9 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இருவரையும் நீதிமன்றக் காவலில் எடுத்து, எஞ்சியநகை மற்றும் பணம் குறித்துவிசாரிக்கப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x