Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

கடலூர் மாவட்டத்தில் - வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட உள்ள 54 பேருக்கு கரோனா : மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடஉள்ள 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மாற்று ஏற்பாடு செய்யப்படுவதாக ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் மொத்தம்9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே.2) நடைபெறுகிறது. தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் கண்டிப்பாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:இம்மாவட்டத்தில் 4 மையங்களில் வாக்கு எண்ணிக்கை பணி நடைபெறுகிறது. ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு14 மேஜைகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், 4 மேஜைகளில் தபால் வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

இப்பணியில் ஈடுபடும் அரசுப்பணியாளர்கள் மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் சுமார் 3,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் 1,631 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மாற்று முகவர்களை நியமிக்க வேண்டும். அரசுப் பணியாளர் எனில் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள மாற்றுப் பணியாளரை பணியில் ஈடுபடுத்துவோம்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழையும் அனைவரும் கண்டிப்பாக கரோனாதொற்று இல்லை என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அல்லது 2 தவணைதடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் இல்லாமல் மையத்துக்குள் அனுமதிக்கமுடியாது என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x