Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
மாட்டுத்தாவணி மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மதுரை மாநகராட்சி நிர்வாகம், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிக அளவில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு தன்னார்வ அமைப்புகளுடன் சேர்ந்து கபசுரக் குடிநீரை வழங்கி வருகிறது.
இதைத்தொடர்ந்து பேருந்து நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. முதல் கட்டமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கபசுரக் குடிநீர் மற்றும் மருந்து பெட்டகங்களை ஆணையாளர் ச.விசாகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் உதவி நகர் நல அலுவலர் தினேஷ்குமார், செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT