Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

விளைச்சல் வீழ்ச்சி, வாகன வாடகை உயர்வால் - ரூ.50-க்கு 6 நுங்குகள் விற்பனை :

விளைச்சல் வீழ்ச்சி, வாகன வாடகை உயர்வால் 6 முதல் 8 நுங்குகள் ரூ.50-க்கு விற்பனை செய்யப் படுகின்றன.

மதுரை தெப்பக்குளம் வைகை ஆற்றுப் பாலத்தின் இருபுறமும் பீசர்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் வெயிலையும் பொருட்படுத்தாமல் நுங்கு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது கோடை வெப்பத்தைத் தணிக்கும் வகையில் இயற்கையின் வரப்பிரசாதமான நுங்குகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து விவசாயி நாச்சான் கூறியதாவது:

சிலைமான் அருகே பீசர்பட்டினம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் மதுரை தெப்பக்குளம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் சாலையோரங்களில் நுங்கு விற்பனை செய்து வருகிறோம். மற்ற நாட்களில் விவசாயக் கூலி வேலைக்குச் செல்வோம். தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயக் கூலி வேலையும் குறைந்துள்ளது.

நுங்கு சீசன் ஆரம்பித்துள்ளதால், இந்த வியா பாரத்தில் ஈடுபட்டுள்ளோம். கடந்தாண்டைப் போல் இல்லாமல் நுங்கு விளைச்சல் குறைந்துள்ளது. பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து நாங்களே மரத்தில் ஏறி நுங்குகளை வெட்டி மூன்று கண் உடைய நுங்கை ரூ.15-க்கு கொள்முதல் செய்து மதுரைக்கு கொண்டு வருகிறோம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன வாடகை உயர்ந்துள்ளது. இதனால் தற்போது ரூ.50-க்கு 6 நுங்குகள் கொடுக்கிறோம். அளவு சிறிதாக இருந்தால் 8 நுங்குகளை ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம். ஆடி மாதம் வரை நுங்கு விளைச்சல் இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x