Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
தமிழகத்தில் அனைத்து கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு வெளியிட்டு வரும் புதுப்புது அறிவிப்புகள், வணிகர்களை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. மதுபான கடைகளில் ஏற்படாத கரோனா தொற்று, அத்தியாவசிய பொருட்களை வாங்கும்போது ஏற்பட வாய்ப்புள்ளது என்பது ஏற்புடையதல்ல. 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகள் மூடப்பட வேண்டும் என்பதற்கு உரிய காரணங்கள் ஏதும் இல்லை.
பெரிய கடைகளை அடைப்பதால், சிறிய கடைகளில் கூட்ட நெரிசல் நிச்சயம் ஏற்படும் என்ற அடிப்படை கருத்தைக்கூட அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை. தற்போது இஸ்லாமியர்களின் பண்டிகை காலம், இந்துக்களின் குடும்ப மணவிழாக்கள் நடக்கும் காலம் என்பதால் அனைத்து கடைகளும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் .
இல்லையெனில், அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்துக்கு அரசே பொறுப்பேற்றுக் கொள்ளும் பட்சத்தில், மே 1 முதல் 15-ம் தேதி வரை தொடர் கடையடைப்பு நடத்தி, கரோனா தொற்றை ஒழிக்க வணிகர்கள் தங்கள் பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT