திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் :

திருச்சியில் வாகன ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தென்னிந்திய வாகன ஓட்டுநர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மார்ட்டின் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் டி.ரொசாரி, மாவட்டப் பொருளாளர் எஸ்.ஹரிஹரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், கரோனா கட்டுப்பாடுகளால் போதிய வருமானம் இன்றி வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சாலை வரி, காப்பீட்டுக் கட்டணம், எப்சி உள்ளிட்ட வாகனங்களுக்கான அனைத்து வரி இனங்களையும் ரத்து செய்ய வேண்டும்.

ஊரடங்கு நேரத்திலும் பல்வேறு மாநிலங்களில் சரக்குப் போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களிலும் சரக்கு வாகனங்களை போக்குவரத்து போலீஸார் மறித்து வலுக்கட்டாயமாக மாமூல் வசூலிக்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும். டீசல், பெட்ரோல், காஸ் ஆகியவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் சேர்க்க வேண்டும்.

சொந்த பயன்பாட்டுக்கு பதிவு செய்து, வாடகை வாகனமாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நிலவும் ஊழலைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in