Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே மீட்கப்பட்ட - 2 குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைப்பு : மாயமான தாயாரை தேடி வரும் காவல் துறையினர்

கணவருடன் ஏற்பட்ட சண்டையில் ஒன்றும் அறியாத தனது 2 குழந்தைகளையும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தவிக்கவிட்டு மாயமான தாயாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில், நிர்கதியாய் நின்ற குழந்தைகளை மீட்டு தந்தையிடம் நேற்று ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள ஓட்டல் தெரு முகப்பில் நேற்று முன்தினம் காலை 6 மணியளவில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் அழுதபடி நின்றிருந்தனர். இதைக்கண்ட வியாபாரிகள் அவர்களை அழைத்து விசாரித்தபோது, ‘‘அம்மாவுடன் ரயிலில் வந்த எங்களை இங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு எங்கேயோ சென்றுவிட்டார்’’ என அழுதபடி கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வியா பாரிகள் அப்பகுதி முழுவதும் மாயமான தாயை தேடினர். ஆனால், அவர் கிடைக் காததால் ஜோலார்பேட்டை காவல் துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயலட்சுமி மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து சிறுவன் மற்றும் சிறுமியை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தபோது, சிறுவன் பெயர் ஹரீஷ் (5) என்பதும், சிறுமியின் பெயர் ஜீவிதா (2) என்பதும், அவர்கள் சென்னையில் இருந்து ரயில் மூலம் தனது தாயாருடன் வந்தது தெரியவந்தது. மற்ற விவரங்களை அந்த குழந்தைகளால் சரியாக சொல்ல முடியவில்லை.

இருப்பினும், குழந்தைகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் சென்னை ஆவடியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, ஆவடி காவல் துறையினரை தொடர்பு கொண்ட ஜோலார் பேட்டை காவல் துறையினர் அங்கு தாயுடன் குழந்தைகள் காணாமல் போனதாக ஏதேனும் புகார் வந்துள்ளதா? என விசாரித்தனர்.

இதில், ஆவடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் (28) என்பவருக்கும் அவரது மனைவி மீனாட்சிக்கும் (24) இடையே கடந்த 27-ம் தேதி ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக்கொண்டு ரயில் ஏறிய மீனாட்சி தனது 2 குழந்தைகளையும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் தவிக்கவிட்டு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் லோகேஷ் ஜோலார்பேட்டைக்கு வரவழைக்கப்பட்டு அவருக்கு அறிவுரைகளை வழங்கிய காவல் துறையினர் 2 குழந்தைகளையும் நேற்று ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஜோலார்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான மீனாட்சியை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x