

எடப்பாடி அருகே விசைத்தறிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த சம்பளப் பணம் ரூ.6.80 லட்சம் ரொக்க பணம் எரிந்து சாம்பலானது.
சேலம் மாவட்டம் எடப்பாடி போடிநாயக்கன்பட்டி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சீனிவாசன், முத்தையன் உள்ளிட்டோருக்கு சொந்தமான விசைத்தறி ஜவுளி குடோன் உள்ளது.
குடோனில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், குடோனில் இருந்த இயந்திரங்கள், ஜவுளி உற்பத்திப் பொருட்கள் மற்றும் அலுவலக அறையில் தொழிலாளர்களுக்கு சம்பள வழங்க வைத்திருந்த ரூ.6.80 லட்சம்ரொக்க பணம் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலனது.
இதுதொடர்பாக எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்தது.
பழுதான லாரி சேதம்
சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சீலநாயக்கன்பட்டியில் பட்டறை வைத்துள்ளார். இவரது பட்டறையில் பயன்பாடற்ற பழுதான லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 1 மணிக்கு பட்டறையில் இருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து அங்கு சென்ற செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அரை மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பட்டறைக்கு அருகே குப்பை எரியூட்டப்பட்ட நிலையில், அதில் இருந்த தீ பரவியது தெரியவந்தது.