Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள 11சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும் வரும் 2-ம் தேதி நடைபெற வுள்ள வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கணினி குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டன.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 4 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணி வரும் 2-ம் தேதி நடக்கவுள்ளது.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு பணி ஒதுக்கீடு சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் பிரிவு அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் முன்னிலையில், கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் ராமன் கூறியதாவது:
வரும் மே 2-ம் தேதி நடத்தப் படவுள்ள வாக்கு எண்ணும் பணிகளுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ண ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 154 மேஜைகள் அமைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
வாக்கு எண்ணும் பணியில் ஒரு மேஜைக்கு மேற்பார்வையாளர், உதவியாளர், நுண் பார்வை யாளர் என மொத்தம் 3 நபர்கள்ஈடுபடுத்தப்படுவர். 11 தொகுதி களுக்கும் மொத்தம் 594 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இப்பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், உதவி ஆட்சியர் (பயிற்சி) முகமது சபீர் ஆலம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தியாகராஜன், தனி வட்டாட்சியர் (தேர்தல்) சிராஜூதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT