Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

சென்னையில் முழு ஊரடங்கை மீறியதாக - 673 வாகனங்கள் பறிமுதல்; 532 பேர் மீது வழக்கு :

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் தொடர்ந்து 30 மணி நேர முழு ஊரடங்கு அமலில் இருந்தது. முழு ஊரடங்கின்போது பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. தடையை மீறி வெளியே வரும் வாகனங்கள், தேவையின்றி வெளியே சுற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, முழு ஊரடங்கின்போது சென்னையில் 200 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டதோடு, கண்காணிப்புப் பணியில் 7 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் முழு ஊரடங்கை மீறியதாக 673 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இதேபோல் முகக் கவசம் அணியாதது, தனி மனித இடைவெளியைப் பின்பற்றாதது தொடர்பாக 532 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் அபராதமாக ரூ.96,400 வசூல் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x