Published : 24 Apr 2021 03:15 AM
Last Updated : 24 Apr 2021 03:15 AM

பாவூர்சத்திரம் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தது :

பாவூர்சத்திரம் சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்த நிலையில்கேரள வியாபாரிகள் வருகையும்குறைந்ததால் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் தினசரி காய்கறி சந்தைக்கு தென்மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள்விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. கேரள மாநில வியாபாரிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் இருந்து வியாபாரிகள் இங்கிருந்து காய்கறிகளை பொது ஏலத்தில் வாங்கிச் சென்று சில்லறைவிலைக்கு விற்பனை செய்கின்றனர்.

தென் மாவட்டங்களில் தற்போதுகாய்கறிகள் சாகுபடி குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் விலை அதிகரிக்கும். ஆனால், தற்போது விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதுகுறித்து பாவூர்சத்திரம் சந்தை வியாபாரிகள் கூறும்போது, “கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளன. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இரவு 10 மணிக்குள் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால், பாவூர்சத்திரம் சந்தையில் மாலை 4 மணிக்கு பதில் மதியம் 12 மணிக்கே ஏலம் தொடங்கிவிடுகிறது. இரவு 9 மணிக்குள் வாகனங்களில் காய்கறிகள் ஏற்றப்பட்டு,சந்தையில் இருந்து சென்றுவிடுகின்றன. முன்கூட்டியே ஏலம் நடைபெறுவதால் காய்கறிகள் வரத்து மேலும் குறைந்துள்ளது.

பாவூர்சத்திரம் சந்தையில் இருந்து கேரள மாநிலத்துக்கே அதிக அளவில் வியாபாரம் நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாக கேரள வியாபாரிகள் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காய்கறிகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. வெண்டைக்காய் கிலோ ரூ. 4 முதல்5, சின்ன வெங்காயம் 20 முதல் 35 வரை, பெரிய வெங்காயம் 10 முதல்15 வரை விற்பனையாகிறது. உருளைக்கிழங்கு 15 முதல் 17 ரூபாய்வரையும், சேம்பு 3 முதல் 10 வரையும், பால் சேம்பு 10 முதல் 12 ரூபாய் வரையும் விற்பனையாகிறது” என்றனர்.

தென் மாவட்டங்களில் தற்போது காய்கறிகள் சாகுபடி குறைந்த அளவிலேயே உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x