Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

வாக்கு எண்ணும் மையத்தில் கேமராக்கள் இயங்கவில்லை : கடையநல்லூர் எம்எல்ஏ புகார்

கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முஹம்மது அபூபக்கர், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசினர்.

இதுகுறித்து முஹம்மது அபூபக்கர் எம்எல்ஏ கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொடிக்குறிச்சியில் உள்ள யுஎஸ்பி கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் அவ்வப்போது மின்தடை காரணமாக இயங்குவதில்லை.

இதுவரை 3 முறை மின்தடை காரணமாக கேமராக்கள் இயங்காமல் இருந்துள்ளன. இதுபோன்ற நிலை ஏற்படாமல் செய்ய வேண்டும். பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸார் முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளோம்” என்றார்.

பூங்கோதை எம்எல்ஏ மனு

இதேபோல், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், “ஆலங்குளம் தொகுதியில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனா அடிப்படை சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன், ரெம்டெசிவர் உள்ளிட்டவை இருப்பு நிலவரம் குறித்து தெரிவிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி மையங்களை ஆலங்குளம் தொகுதி முழுவதும் ஏற்படுத்தித் தர வேண்டும். அவ்வாறு ஏற்படுத்தினால் ஆலடி அருணா அறக்கட்டளை சார்பில் இலவசமாக வாகன வசதி ஏற்பாடு செய்து தரப்படும். கரோனா குறித்து கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x