Published : 21 Apr 2021 03:16 AM
Last Updated : 21 Apr 2021 03:16 AM

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் :

ஆம்பூர் குடியிருப்புப்பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கைக்குழந்தைகளுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ-கஸ்பா மற்றும் பி-கஸ்பாவின் மையப்பகுதியாக பிராந்தியன்கொல்லை உள்ளது. இங்கு, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

இந்நிலையில், பிராந்தியன் கொல்லை 3-வது தெருவைச் சேர்ந்த உதயகுமார் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையறிந்த பொதுமக்கள் செல்போன் டவரை குடியிருப்புப் பகுதியில் அமைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக நகராட்சி அலுவலகத்திலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் மனு ஒன்றை அளித்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி பிராந்தியன் கொல்லை 3-வது தெருவில் தனியார் செல்போன் நிறுவன ஊழியர்கள் டவர் அமைப்பதற்கான பணிகளை நேற்று தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், செல்போன் டவர் அமைக்க வந்த தொழிலாளர்கள் பொதுமக்களின் கோரிக்கையை நிராகரித்து செல்போன் டவர் அமைப்பதற்கான வேலைகளை செய்தனர்.

இதனால், கோப மடைந்த பிராந்தியன் கொல்லை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன் போராட் டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டவர் அமைப்பதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் எனக்கூறி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, காவல் துறையினரிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘‘குடியிருப்புப் பகுதிக்குள் செல்போன் டவர் அமைக்க வேண்டாம். எங்கள் பகுதியில் டவர் அமைத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என எச்சரித்தனர்.

இதையடுத்து, செல்போன் டவர் அமைக்க வந்த தொழிலாளர்களை அழைத்து பேசிய நகர காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர். காவல் துறையினர் அறிவுறுத்தலின் பேரில் செல்போன் டவர் அமைக்கும் பணியை பாதியில் கைவிடப்பட்டது. இதனை வரவேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மேலும், செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x