

உரங்கள் விலை உயர்வைக் கண்டித்து திருச்சியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.
உரங்கள் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும், உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். உர விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்தி செலவைவிட 2 மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அதன் மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட நேற்று புறப்பட்டனர். அவர்களை அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டிலேயே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, கோரிக்கைகளை வலியுறுத்தியும் மற்றும் டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கும் போலீஸாரை கண்டித்தும் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், கரூர் புறவழிச் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, “நாங்கள் போராட்டம் நடத்த டெல்லிக்கு புறப்படும் ஒவ்வொரு முறையும் போலீஸார் தொடர்ந்து தடுத்து விடுகின்றனர். இந்தமுறை கரோனா பரவலைக் காரணம் காட்டி தடுக்கின்றனர். இதையடுத்து, கோட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்றோம். அதையும் போலீஸார் தடுத்ததால், சாலை மறியலில் ஈடுபட்டோம்’’ என்றார்.
ஆட்சியரிடம் மனு
பின்னர் இதுகுறித்து ம.ப.சின்னத்துரை கூறும்போது, “உர விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், விலை உயர்வை முழுமையாக திரும்பப் பெற வேண்டும். உரம் விலை விவகாரத்தில் உர உற்பத்தி நிறுவனங்கள், விற்பனையாளர்கள், விவசாயிகள் ஆகியோரை அழைத்துப் பேசி நிரந்தர தீர்வு காண வேண்டும். 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.