

சேலம் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து, ஆதார் அட்டைகளுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று கரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
நேற்று (16-ம் தேதி) குமாரசாமிப்பட்டி, என்ஜிஓ காலனி, கோரிமேடு, அம்மாப்பேட்டை, சின்னதிருப்பதி, ஜான்சன்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர்.
ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான தடுப்பூசி இல்லாத நிலையில், 19-ம் தேதி பொதுமக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்படி மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டதால், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
தடுப்பூசி போட வந்தவர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் வாயில் முன்பு நின்று, தாங்கள் உடன் கொண்டு வந்திருந்த ஆதார் அட்டைகளுடன், தடுப்பூசி பற்றாக்குறையாக இருப்பதை சுட்டிக்காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, ‘ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்களை திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.
எனவே, பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்த வேண்டும். கரோனா வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்,’ என்றனர்.