Published : 15 Apr 2021 03:11 AM
Last Updated : 15 Apr 2021 03:11 AM

கோயில்களில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு :

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் மகா அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. பக்தர்கள் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். திருநெல்வேலி சந்திப்பு சாலை குமாரசுவாமி கோயில், பாளையங்கோட்டை சிவன் கோயில், தெற்கு பஜார் மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், குறுக்குத்துறை முருகன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயருக்கு பழக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தெற்குபஜார் முத்தாரம்மன் கோயிலிலும் அம்மனுக்கு கனி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், இலஞ்சி குமாரர் கோயில், பண்பொழி முத்துக்குமாரசுவாமி கோயில் உட்பட பல்வேறு கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. பலர் முகக் கவசம் அணியாமல் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில், குமாரகோயில் முருகன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன், திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் அதிகாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதேநேரம் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டு ஆகம முறைப்படி பூஜைகள் நடைபெற்றன. மேலும் காய்கனிகள் அலங்கரித்து வைத்து விஷூ கனிகாணல் நிகழ்ச்சி நடைபெற்றது.

காலை 7 மணிக்கு பின்னர் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அனுமதிக்கப்பட்டனர்.

நாகர்கோவில் வடசேரியில் உள்ள வள்ளலார் பேரவை சார்பில் நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவுக்கு வள்ளலார் பேரவை மாவட்ட தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எழில் வேலவன் பங்கேற்று அருள்ஜோதியை ஏற்றி வைத்தார். மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கணேசன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x