Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
இருசக்கர வாகனம் மோதி தலையில் எலும்பு முறிவு ஏற்பட்ட முதியவருக்கு ரூ.11.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் மற்றும் காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை அன்னூர் அடுத்த வேப்பம்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்.துரைசாமி (71).இவர், 2018 ஆகஸ்ட் 11-ம் தேதி குமரன்குன்றில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு செல்வதற்காக அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து சென்றார். அப்போது தேவனாபுரத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (33) ஓட்டிவந்த இருசக்கர வாகனம் துரைசாமி மீது மோதியது.
இந்த விபத்தில் துரைசாமியின்தலை, முகத் தாடைகளில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. துரைசாமி விவசாயம், பால் வியாபாரம் செய்து மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதித்து வந்துள்ளார்.
விபத்துக்குப் பிறகு அவரால் பழையநிலையில் வேலைசெய்ய முடியாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, இழப்பீட்டு தொகையாக ரூ.19 லட்சம் வழங்க உத்தரவிடக்கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் துரைசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முனிராஜா, “அதிவேகமாக வந்த கோபாலகிருஷ்ணனின் அஜாக்கிரதை, கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது உறுதியாகிறது.
விபத்து நடந்தபோது அந்த இருசக்கர வாகனத்துக்கு விபத்து காப்பீடு நடைமுறையில் இருந்துள்ளது.
எனவே, மனுதாரரின் வலி,வேதனை, மருத்துவ செலவுகள்,எதிர்கால சிகிச்சை செலவு, வருவாய் இழப்பு ஆகியவற் றுக்காக ரூ.11.69 லட்சத்தை 7.50 சதவீத வட்டியுடன் 30 நாட்களுக்குள் கோபாலகிருஷ்ணன் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்க வேண்டும்.
தீர்ப்புத் தொகையில் 70 சதவீதத்தை மனுதாரர் நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகையை ஏதேனும் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3 ஆண்டுகளுக்கு வைப்புத்தொகையாக செலுத்தி விட்டு, 3 ஆண்டுகளுக்குப் பிறகு அதை முழுமையாக எடுத்துக்கொள்ளலாம். அதுவரை வைப்புத்தொகைக்கான வட்டியை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர் பெற்றுக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT