Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் - தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக, காங்கிரஸ் புகார் :

தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை திமுக வழக்கறிஞர் நீலகண்டன் சந்தித்து புகார் மனு அளித்தார். அம்மனு தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தேர்தலை அமைதியாக நடத்த திமுக முழு ஒத்துழைப்பு அளித்தது. அதிமுகவினர் பல இடங்களில் தேர்தல் விதிகளை மீறியுள்ளனர். அமைச்சர் பெஞ்சமின் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது குறித்தும் புகார் தெரிவித்துள்ளோம்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்படுவதுடன், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளை கண்காணிக்க அனுமதிக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளோம். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்காது என்று தலைமை தேரத்ல் அதிகாரி தெரிவித்துள்ளார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹசன், வழக்கறிஞர் நவாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சூரியபிரகாசம் ஆகியோர் சத்யபிரத சாஹுவிடம் அளித்துள்ள புகார் குறித்து கூறும்போது, ‘‘வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், அந்த இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் அடங்கிய அனைத்து சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட்ட காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். இருசக்கர வாகனத்தில் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் முதல் கட்டமாக 3 பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x