Published : 08 Apr 2021 03:14 AM
Last Updated : 08 Apr 2021 03:14 AM

திருச்சி மாவட்டத்தில் - 4 வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு :

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 4 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் நேற்று வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, ரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்(தனி) ஆகிய 9 தொகுதிகளில் 3,292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் 5,688 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,950 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 4,247 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆண்கள் 11,35,740 பேரில் 8,42,240 பேரும், பெண்கள் 12,02,728 பேரில் 8,77,897 பேரும், இதரர் 237 பேரில் 58 பேரும் என 17,20,195 பேர் வாக்களித்திருந்தனர். இது 73.55 சதவீதம் ஆகும்.

தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக, திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு ஜமால் முகம்மது கல்லூரியிலும், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளுக்கு சமயபுரம் கே.ராமகிருஷ்ணன் பொறியியல் கல்லூரியிலும், முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளுக்கு கண்ணனூர் இமயம் பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை, ரங்கம், திருவெறும்பூர் ஆகிய தொகுதிகளுக்கு திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.

தொடர்ந்து, நேற்று காலை 11 மணியளவில் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டப்பட்டு, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் எஸ்.திவ்யதர்ஷினி முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை சீல் வைக்கப்பட்டது.

அப்போது, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுப.கமலக் கண்ணன் (திருச்சி கிழக்கு), என்.விஸ்வநாதன் (திருச்சி மேற்கு) உள்ளிட்டோர் உடனிருந்தனர். மேலும், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கேமரா மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x