Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

சேலம், சத்தியமங்கலத்தில் : டெண்டர் வாக்குப்பதிவு செய்த 2 இளைஞர்கள் :

சேலம் / ஈரோடு: சேலம், சத்தியமங்கலத்தில் தனது ஓட்டை யாரோ போட்டதால், அதை எதிர்த்த 2 இளைஞர்கள் டெண்டர் வாக்குப்பதிவு செய்தனர்.

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அம்மாப்பேட்டை, பாவடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம் எண் 208-ல் அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி (32) நேற்று வாக்களிக்க சென்றார்.

அப்போது அவரது வாக்கை ஏற்கெனவே யாரோ பதிவு செய்துவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி தனது அடையாள ஆவணங்களை காட்டி தேர்தல் அலுவலர்களிடம் முறையிட்டார்.

இதையடுத்து, தேர்தல் அலுவலர்கள், பாலாஜியை டெண்டர் வாக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்கி அதற்கான படிவத்தை வழங்கினர். அதைப் பெற்று பூர்த்தி செய்த பாலாஜி அதை உரையில் வைத்து தேர்தல் அலுவலரிடம் வழங்கினார்.

சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கெஞ்சனூர் அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்றார். அங்கிருந்த தேர்தல் பணியாளர்கள் உங்களது வாக்கு ஏற்கெனவே பதிவாகி உள்ளதாக தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சரவணன் எனது வாக்கை வேறு ஒருவர் எப்படி பதிவு செய்யலாம் என அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் சட்டப் பிரிவு 49 பி - ன் படி படிவம் 17-பி நிரப்பி டெண்டர் வாக்குப்பதிவு செய்ய அவருக்கு அலுவலர்கள் அனுமதியளித்தனர்.

“தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் டெண்டர் வாக்குகள் எண்ணப்படும். மேலும் ஒரு வாக்குச்சாவடியில் 14 சதவீதத்துக்கும் மேல் டெண்டர் வாக்கு பதிவாகியிருந்தால் அந்த வாக்குச்சாவடி மையத்தில் மறு வாக்குப்பதிவு செய்யப்படும்” என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x