Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM

ஆவணமின்றி ரயிலில் எடுத்து வந்த : 62 கிலோ வெள்ளி; ரூ.6.43 லட்சம் பறிமுதல் :

உரிய ஆணவமின்றி எடுத்து வந்ததாக சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்த வெள்ளிக்கட்டி, கொலுசு மற்றும் பணம்.

சேலம்: சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இரு பெண்கள் ஆவணமின்றி எடுத்து வந்த 62.300 கிலோ வெள்ளிக்கட்டி, கொலுசு மற்றும் ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 400-ஐ ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.

கேரள மாநிலத்தில் இருந்து சேலம் வரும் ரயிலில் இரு பெண்கள் கடத்தல் பொருட்களை கொண்டு வருவதாக, சேலம் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் நடைமேடை 5 அருகே நின்ற இரு பெண்களிடம் ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சந்திரமோகன் மற்றும் பெண் காவலர்கள் விசாரணை நடத்தினர்.

மேலும், அவர்களிடம் இருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் 28 வெள்ளிக்கட்டிகள் மற்றும் வெள்ளிக்கொலுசுகள் மொத்தம் 62 கிலோ 300 கிராமும், ரூ.6 லட்சத்து 43 ஆயிரத்து 400-ம் இருந்தது.

விசாரணையில், அவர்கள் சேலம் அடுத்த அரியாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் என்பவரின் மனைவி விஜயா (46), அவரது மகள் ரேணுகா தேவி (26) என்பது தெரிந்தது. இருவரும் ராமகுண்டத்தில் இருந்து சேலம் வந்ததற்கான ரயில் டிக்கெட் வைத்திருந்தனர்.

மேலும் வெள்ளிக் கட்டிகளுக்கு ரசீது வைத்திருந்தனர். இதுதொடர்பாக வணிக வரித்துறையினர் நடத்திய விசாரணையில், ரசீது முறையானது இல்லை என தெரிந்தது. பணத்துக்கும் உரிய ஆவணம் இல்லை.

இதையடுத்து, ரயில்வே போலீஸார், வெள்ளிக் கட்டிகள் மற்றும் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்து சேலம் மேற்கு தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் தனசேகரனிடம் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x