Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சேலத்தில் வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்த தந்தை, மகன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இருசக்கர வாகனம் மற்றும் 2,754 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, கடந்த 4-ம் தேதி முதல் இன்று (6-ம் தேதி) வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுக்க மாநகர காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் பெரமனூர் கோவிந்தகவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்த மாதேஸ் (55) என்பவர் வீட்டில் மது பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, பள்ளப்பட்டி போலீஸார் மாதேஸ் வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் இருந்த 2,174 மதுபாட்டில் மற்றும் ரூ.77 ஆயிரம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாதேஸ் மற்றும் அவரது மகன் கண்ணன்(42) ஆகியோரை கைது செய்தனர்.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் கிச்சிப்பாளையம் போலீஸார் ரோந்து பணியின்போது, மது விற்பனை செய்த முருகேசன் (46), மணிகண்டன் (31) ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து 140 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், அதே பகுதியில் மாரியப்பன் என்பவரிடம் 20 மதுபாட்டிலை பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.
சேலம் அன்னதானப்பட்டி மணியனூர் காத்தாயம்மாள் நகரில் மது விற்ற சின்னபிள்ளை (60) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 420 மதுபாட்டிலை பறிமுதல் செய்தனர்.
சேலத்தில் பல்வேறு இடங்களில் போலீஸார் நடத்திய சோதனையில் மொத்தம் 6 பேரை கைது செய்து, 2,754 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.சேலம் பெரமனூரில் ஒரு வீட்டில் போலீஸார் பறிமுதல் செய்த 2,174 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனம் மற்றும் மது பதுக்கியதாக கைதான மாதேஸ், அவரது மகன் கண்ணன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT