

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரு நாட்களே இருக்கும் நிலையில், ஈரோட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக வேட்பாளர் முன்னிலையில், அதிமுக ஊராட்சித் தலைவர் மற்றும் மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்த அவரது கணவர் ஆகியோர் திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரு நாட்களே உள்ள நிலையில், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்கள் சார்ந்த கட்சி நிர்வாகிகளுடன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சு.முத்துசாமி பிரச்சாரம் மேற்கொண்டபோது, அதிமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சித் தலைவரும், கட்சி நிர்வாகியுமான அவரது கணவரும் திமுகவில் இணைந்தனர்.
ஈரோடு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் மணி என்ற சின்னசாமி. இவரது மனைவி மோகனப்ரியா பிச்சாண்டம்பாளையம் ஊராட்சித் தலைவராக உள்ளார்.
இவர்களது தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். வெள்ளோட்டில் நடந்த இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி மாறிய கொமதேகவினர்