பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை - ரூ.36.77 கோடி மதிப்புள்ள தங்கம், 89 கிலோ வெள்ளி, ரூ.35.82 லட்சம் பறிமுதல் : சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை -  ரூ.36.77 கோடி மதிப்புள்ள தங்கம், 89 கிலோ வெள்ளி, ரூ.35.82 லட்சம் பறிமுதல்  :  சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
Updated on
1 min read

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் நேற்று வரை உரிய ஆவணங்களின்றி எடுத்துவரப்பட்ட ரூ.35.82 லட்சம், ரூ.41.75 லட்சம் மதிப்புள்ள 89.58 கிலோ வெள்ளிப் பொருட்கள், 90 சேலைகள், ரூ.36.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க வாகனச் சோதனைகளில் ஈடுபட பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு வகையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு, வீரபாண்டி, ஓமலூர், எடப்பாடி, கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர், சங்ககிரி மற்றும் மேட்டூர் ஆகிய 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 99 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 11 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குழுக்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டதிலிருந்து நேற்று (15-ம் தேதி) காலை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.35.82 லட்சம், ரூ.41.75 லட்சம் மதிப்புள்ள 89.58 கிலோ வெள்ளிப் பொருட்கள், 90 சேலைகள், ரூ.36.77 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருட்களுக்கான ஆவணங்களைச் சமர்ப்பித்த பின்னர் அவற்றை ஆய்வு செய்து விடுவிக்கப்படும்.

இதன்படி தேர்தல் குழுவின் மூலமாக ஆவணங்கள் சரிபார்த்த பின்னர் ரூ.3.25 லட்சம் மதிப்பிலான 4.850 கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.4.99 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in