

சேலம் அரிசிபாளையத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி மாநகர நல அலுவலர் பார்த்திபன் கூறியதாவது:
சேலம் அரிசிப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்று வந்துள்ளனர். அவர்கள் குடும்பத்தினருக்கு நடந்த கரோனா பரிசோதனையில் குடும்பத்தில் உள்ள 6 பேர்களில் 5 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இதைத் தொடர்ந்து, அந்த வீதியில் வசிக்கும் 60 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த வீதிக்கு சீல் வைத்து கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.