மதுரை - தேனி அகலப்பாதையில் இன்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்

மதுரை - தேனி அகலப்பாதையில்  இன்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
Updated on
1 min read

போடி - மதுரை இடையிலான மீட்டர்கேஜ் ரயில் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி, கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கியது. 90 கி.மீ. தூரம் உடைய இத்தடத்தில் தொடக்கத்தில் வேகமாக நடந்த பணிகள் பின்னர் தொய்வடைந்தன.

கரோனா, வடமாநிலத் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்த பணி, கடந்த 6 மாதங்களாக மும்முரமாக நடந்தன. மதுரை - உசிலம்பட்டி, உசிலம்பட்டி - ஆண்டிபட்டி இடையே ரயில் சோதனை ஓட்டம் ஏற்கெனவே முடிவடைந்திருந்தது. தற்போது தேனி வரை பணிகள் முடிந்த நிலையில், தண்டவாளத்தில் இன்ஜினை இயக்கி இன்று சோதனை செய்யப்பட உள்ளது.

மதுரையில் காலை 10 மணிக்குப் புறப்படும் இன்ஜின் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி வழியே தேனி வரை இயக்கப்பட உள்ளது. தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபடி, தேனி ரயில் நிலையத்தை 2 மணிக்கு வந்தடையும். எனவே, இப்பாதையில் உள்ள ஆளில்லாத ரயில்வே கேட் பகுதிகளை இந்த நேரங்களில் கடந்துசெல்ல வேண்டாம் என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in