Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கோவை கூட்ஸ்ஷெட் சாலையில் பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்பு பணி தாமதம் விரைவில் முடிக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

கோவை

கோவை பெரியகடைவீதியில் இருந்து கூட்ஸ்ஷெட் சாலை வழியாக அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு செல்லும் சாலையின் அணுகு சாலையில் பதிக்கப்பட்டிருந்த பாதாள சாக்கடைக் குழாயில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி உடைப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு 7 அடி ஆழம், 15 அடி அகலத்துக்கு பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து, பழுதடைந்த பாதாள சாக்கடைக் குழாயை அகற்றிவிட்டு, 40 அடி தூரத்துக்கு, 800 எம்.எம். விட்டம் கொண்ட, புதிய பாதாள சாக்கடைக் குழாயை மாநகராட்சி அலுவலர்கள் பொருத்தினர். இந்நிலையில், அருகேயுள்ள குழாயிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், அந்த சாலையில் பழுதடைந்த குழாய்களை முற்றிலும் மாற்றிவிட மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, "இரண்டு மாதங்க ளாகியும் பாதள சாக்கடைக் குழாய் சீரமைப்புப் பணி முடியவில்லை.

இதனால் அணுகுசாலையைப் பயன்படுத்த முடியாமல், மேம்பா லத்தின் வழியாக வர வேண்டியுள்ளது. எனவே, பாதாள சாக்கடைக் குழாய் சீரமைப்புப் பணியை விரைவில் முடிக்க வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘அணுகு சாலையில் 140 அடி தூரத்துக்குப் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடைக் குழாய்களின் தரத்தை ஆய்வு செய்து, தரமில்லாததை மாற்றும் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது புதிய குழாய்கள் பதிக்கப்பட்டு, இணைப்புப் பகுதியில் ‘மேன்ஹோல்’ அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி விரைவில் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்காக அணுகுசாலை விரைவில் திறக்கப்படும்,’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x