Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

கத்திமுனையில் வழிப்பறி எஸ்ஐ-யிடம் செல்போன் பறிப்பு இருவேறு சம்பவங்களில் 4 பேர் கைது

சென்னை

ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக 2 பேரையும் மற்றொரு சம்பவத்தில் கத்திமுனையில் ஐஸ்கிரீம் கிடங்கு உரிமையாளரிடம் வழிப்பறி செய்த 2 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, விருகம்பாக்கம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன். ஐஸ்கிரீம் கிடங்கு நடத்தி வருகிறார். கடந்த 19-ம் தேதி கிடங்குக்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் பரசுராமனிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதுடன் சரமாரியாக தாக்கி, அவரிடமிருந்து பணத்தை பறித்துவிட்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீஸார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.

இதேபோல் சென்னை காரப்பாக்கம், பொன்னி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ரவிகுமார், 2 தினங்களுக்கு முன்பு போரூர் கார்டன் பகுதியில் உள்ள ஏடிஎம் மைய வாசலில் பணம் எடுப்பதற்காக நின்றிருந்தார். அப்பொழுது அங்கு வந்த 2 பேர் ரவிகுமாரிடம் பேச்சு கொடுப்பது போல நடித்து, அவரது செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர்.

ரவிகுமார் சத்தம் போட்டுக் கொண்டே அவர்களை துரத்தியபோது, அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் கார்த்திகேயன், மாதேஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x