Published : 22 Feb 2021 03:17 AM
Last Updated : 22 Feb 2021 03:17 AM

பெட்ரோல், டீசல் மீதான கலால், வாட் வரிகளை குறைக்க வலியுறுத்தல்

மதுரை

பெட்ரோல், டீசல் மீதான கலால் மற்றும் மதிப்புக்கூட்டு வரியை கணிசமாகக் குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் அடிப்படை விலை ரூ. 31.82 ஆக இருக்கும்போது மத்திய அரசின் கலால் வரி பெட்ரோலுக்கு ரூ.32.98 காசும், டீசலுக்கு ரூ.31.83 காசும் விதிக்கப்பட்டது.

அதேபோல், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி பெட்ரோலுக்கு 34 சதவிகித அடிப்படையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.19.48 பைசாவும், டீசலுக்கு 25 சதவிகிதம் அடிப்படையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15.33 பைசாவும் விதிக்கப்பட்டது.

மேலும் சாலைப் போக்குவரத்துக் கட்டமைப்பு செஸ், விவசாயிகளின் நலனுக்கான செஸ் என உலகிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் மீது அதிகபட்சமாக 69 சதவிகித வரிகள் விதிக்கப்படுகின்றன.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய, மாநில அரசுகள் கருத்தில்கொண்டு கலால், மதிப்புக்கூட்டு வரியைக் கணிசமாகக் குறைக்க வேண்டும். மிகுந்த நிதி நெருக்கடியில் இருக்கும் தொழில் வணிகத் துறையினரையும், பொதுமக்களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x