Published : 20 Feb 2021 03:18 AM
Last Updated : 20 Feb 2021 03:18 AM

தனியார்மய நடவடிக்கையைக் கண்டித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி/ புதுக்கோட்டை

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கையைக் கண்டித்து திருச்சியில் நேற்று அனைத்து வங்கி ஊழியர்கள்- அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி கன்டோன்மென்ட் பகுதி வில்லியம்ஸ் சாலையில் உள்ள இந்தியன் வங்கிக் கிளை முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ராமராஜூ தலைமை வகித்தார்.

வங்கிகள் இணைப்பு மற்றும் வங்கி சீர்திருத்த நடவடிக்கை ஆகியவற்றை கைவிட வேண்டும். பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்ஐசி ஆகியவற்றை தனியார்மயமாக்குவதைக் கைவிட வேண்டும். பெரு நிறுவனங்கள் மற்றும் பெரு முதலாளிகளிடமிருந்து வாராக் கடன்களை விரைவாக வசூலிக்க வேண்டும். வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாதவர்கள் மீது குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், தொடர்புடையவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.டி.ராமமூர்த்தி, எஸ்பிஐஓஏ மண்டலச் செயலாளர் கணபதி சுப்பிரமணியன், என்சிபிஇ மண்டலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஏஐபிஓஏ மாவட்டச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல, புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

இதில், பல்வேறு வங்கி சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x