மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.4.20 லட்சம் குட்கா பறிமுதல்

மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.4.20 லட்சம் குட்கா பறிமுதல்
Updated on
1 min read

கர்நாடகாவிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக எஸ்பி பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து குந்தாரப்பள்ளி கூட்டு ரோடு பகுதியில் போலீஸார் வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து வந்த மினி லாரியை நிறுத்துமாறு போலீஸார் சைகை காட்டினர்.

போலீஸாரை கண்டதும், மினி லாரியை திருப்பிய ஓட்டுநர், மீண்டும் பெங்களூரு நோக்கிச் சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மேலுமலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் ரஜினிக்கு தகவல் அளித்தனர். அவ்வழியே வந்த லாரியை போலீஸார் நிறுத்தி, சோதனை மேற்கொண்டனர். அதில் 92 பைகளில் ரூ.4.20 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து குட்கா பொருட்களுடன், லாரியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் லாரியை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா சோம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (25), அவருடன் வந்தவர் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ் (26) என்பதும் தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in