குமாரபாளையத்தில் மக்கள் குறைகேட்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

குமாரபாளையத்தில் மக்கள் குறைகேட்பு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
Updated on
1 min read

குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 10, 11-வது வார்டு பொதுமக்களிடம் மின்சாரத் துறை அமைச்சர் கோரிக்கை மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமை வகித்தார். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். குடிநீர் வசதி, கான்கிரீட் சாலை, தொழிற்கடன், ஆவின்பாலகம் அமைத்தல் உள்ளிட்டவை கேட்டு 500-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டன.

மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கமணி உத்தரவிட்டார். தொடர்ந்து 15 பயனாளிகளுக்கு முதியோர், மாற்றுத்திறனாளி மற்றும் விதவை ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு, 8 பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்றும் உத்தரவு உள்ளிட்டவற்றை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்வில் தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணைய இயக்குநர் ஏ.கே.நாகராஜன், குமாரபாளையம் நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.எஸ்.எம். பாலசுப்பிரமணியன், வட்டாட்சியர் தங்கம், நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லி பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in