Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் பேருந்துகளால் பயணிகள் அவதி மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுமா?

மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்படுவதால், மேட்டுப்பா ளையம்-கோவை இடையிலான பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக மேட்டுப்பாளையம் முதல் கோவைவரை தினமும் 5 முறை இயக்கப்பட்ட பயணிகள் ரயில் சேவை, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்நிறுத்தப்பட்டது. தற்போது பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை ரயில்வே அறிவித்து வரும் நிலையில், மேட்டுப்பா ளையம்-கோவை பயணிகள் ரயில்இன்னும் இயக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் தாலுகா பொதுத் தொழிலாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் எஸ்.பாஷா, சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "வரும் 8-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல, அரசு, தனியார் அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வருகின்றன.

மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் பேருந்துகள் அனைத்தும் மாற்றுப்பாதையில் சென்று வருகின்றன. இதனால், பயணத் தொலைவு, நேரம் அதிகமாகியுள்ளது. கோவைக்கு தினசரி அலுவலகம், வேலைக்கு வந்து செல்வோர், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரயிலை உடனடியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “பயணிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டுப்பாளையம்-கோவை வழித்தடத்தில் முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயில்களை இயக்குவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். உரிய அனுமதிக்குப் பிறகு அந்த ரயில்கள் இயக்கப்படும்"என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x