

பதினோரு வயது மகன் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சோகம் தாங்காமல் தந்தை விஷம் குடித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள புதுப்பச்சேரியைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (41). விவசாயியான இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் கவின் (11) அங்குள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குளிக்கச் சென்றபோது, வீட்டுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் கவின் தவறி விழுந்துவிட்டார். இதனை அறிந்ததும் நம்பிராஜன் கிணற்றில் குதித்து தேடியுள்ளார். ஆனால், சிறுவன் கிணற்றுக்குள் முழுமையாக மூழ்கிவிட்டதால், சாத்தான்குளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். மனவேதனை அடைந்த நம்பிராஜன் வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாசரேத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாசரேத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.