

எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் நேற்று நடந்த சந்தையில் ரூ.5 கோடிக்கு கால்நடைகள் மற்றும் காய்கறிகள், தானியங்கள் வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
எடப்பாடி அடுத்த கொங்கணாபுரத்தில் வாரம்தோறும் சனிக் கிழமை கால்நடை சந்தை கூடி வருகிறது. நேற்று நடந்த சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கால்நடை வளர்ப்பவர்கள் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். சந்தையில் 6,000 ஆடுகள், 1,000பந்தய சேவல்கள், 2,500 கோழி, சேவல்கள் மற்றும் 110 டன் காய்கறிகள், 50 டன் பருப்பு வகைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இதில், 10 கிலோ ஆடுகள் ரூ.5,800 முதல் ரூ. 7,100 வரை விற்பனையானது. 20 கிலோ ஆடுகள் ரூ.12,100 முதல் ரூ.14,200 வரை விற்பனையானது. குட்டி ஆடுகள் ரூ.2,000 முதல் ரூ.2,200 வரை விற்பனையானது. பந்தய சேவல்கள் குறைந்தபட்சம் ரூ.ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.5,500-க்கும், வளர்ப்பு கோழிகள் ரூ.100 முதல் ரூ.1,000 வரையும் விற்பனையாகின. பச்சை பயிறு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரையும், தட்டைப்பயிறு ரூ.50 முதல் ரூ.60 வரையும், உளுந்து ரூ.65 முதல் ரூ.80 வரையும், அவரை ரூ.40-க்கும் விற்பனையானது.
இதுதொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, “சந்தையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் ஆர்வமுடன் கால்நடைகளை வாங்கிச் சென்றனர். நேற்று ரூ.5 கோடி வரை வர்த்தகம் நடந்தது” என்றனர்.