Published : 30 Jan 2021 03:15 AM
Last Updated : 30 Jan 2021 03:15 AM
வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு கேட்டு ஆறாவது கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாமக மாநில துணை பொதுச் செயலாளர் அருள் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் கதிர்ராஜரத்தினம், மாநில அமைப்பு செயலாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தனர்.
பாமக மாநில அமைப்புச் செயலாளர் செல்வகுமார் பேசும்போது, ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 115 சாதிகள் உள்ளன. இதில் 80 சதவீதம் பேர் வன்னியர்கள். கடந்த 1987-ம் ஆண்டு நடந்ததைப்போல, ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று இளைஞர்கள் கேட்டு வருகின்றனர். அதுபோன்ற போராட்டத்துக்கு எங்களை தள்ளாமல், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.
ஈரோடு, நாமக்கல்
நாமக்கல் முதலைப்பட்டி புறவழிச்சாலை அருகே பலபட்டரை மாரியம்மன் கோயிலில் இருந்து ஊர்வலமாக பூங்காசாலைக்கு வந்தனர். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் பொன். ரமேஷ், தினேஷ் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஓசூர் துணை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் இளங்கோ தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், மாவட்ட செயலாளர்கள் மாணிக்கம், சிவானந்தம், மாநிலத் துணைத் தலைவர் வெங்கடேஷ், மாநில துணை அமைப்புச் செயலாளர் மாதேஸ்வரன், மாவட்டக் கவுன்சிலர் மூர்த்தி, மாநில இளைஞர் சங்க துணைத் தலைவர் பழனிவேல் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆட்சியரிடம் மனு
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நேற்று ஆட்சியரிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார்.பாமக-வின் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாநில துணை தலைவர் சாந்தமூர்த்தி, முன்னாள் மக்களவை உறுப்பினர்கள் செந்தில், பாரிமோகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் அரசாங்கம், மாவட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், நாகராஜ், இளைஞர் சங்க மாநில செயலாளர் செந்தில், பசுமைத் தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளர் மாது, தமிழ்நாடு உழவர் பேரியக்க மாநில துணை செயலாளர் சின்னசாமி, இளம்பெண்கள் சங்க மாநில துணை செயலாளர் சாந்தினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகாவை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT