Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

கோவை வனக் கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்

கோவை வனக்கோட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 153 யானைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் வனத் துறையிடமிருந்து பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பா ளையம், காரமடை, மேட்டுப்பாளை யம், சிறுமுகை ஆகிய 7 வனச் சரகங்களை உள்ளடக்கியது கோவை வனக் கோட்டம். கோவையின் மேற்குப் பக்கம் மலைச்சரிவுகளும், கிழக்குப் பக்கம் பட்டா நிலங்களும் இருப்பதால், இடைப்பட்ட மலையடிவாரப் பகுதிகளையே யானைகள் தங்கள் வாழ்விடத்துக் காகவும், உணவு தேவைக்காகவும் அதிகம் பயன்படுத்துகின்றன.

தமிழகத்தில் யானை-மனித மோதல் அதிகம் நடைபெறும் இடமாக கோவை வனக் கோட்டம் இருந்து வருகிறது. இதற்கு, அடிவாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளில் வந்துள்ள பெரிய அளவிலான கட்டுமானங்களும், விவசாயமுறை மாற்றமும் காரணமாக உள்ளன.

உணவுப் பற்றாக்குறைக் காலங்களில் வேளாண் பயிர்கள் யானைகளை ஈர்ப்பதால், அவைஉணவுக்காக வனப் பகுதியைவிட்டு அடிக்கடி வெளியேறுகின் றன. அவ்வாறு தினந்தோறும் வெளி யேறும் யானைகளை விரட்டுவது வனப் பணியாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.

இவ்வாறு யானைகள் வெளியேறும்போது ஏற்பட்ட மோதலால் கடந்த 10 ஆண்டுகளில் கோவை வனக் கோட்டத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், 10 ஆண்டுகளில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை குறித்து கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் ந.பன்னீர்செல்வம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) தகவல்களை பெற்றுள்ளார்.

ஓராண்டில் 23 பேர் உயிரிழப்பு

இது தொடர்பாக கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அலுவலகம் அளித்த பதிலில், “2010-ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் மாதம் வரை மனித-விலங்கு மோதலில் கோவை வனக் கோட்டத்தில் மொத்தம் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 2019-2020-ம் ஆண்டில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு மொத்தம் ரூ.3.59 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, கோவை வனக் கோட்டத்தில் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு, துப்பாக்கிச் சூடு, நோய்த் தாக்கம், யானைகளுக்கு இடையேயான மோதல், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றால் யானைகள் உயிரிழப்பும் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு, கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2020 செப்டம்பர் வரை மொத்தம் 153 யானைகள் கோவை வனக் கோட்டத்தில் உயிரிழந்துள்ளதாக ஆர்டிஐ மனுவுக்கு வனத் துறை அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x