Published : 29 Jan 2021 03:13 AM
Last Updated : 29 Jan 2021 03:13 AM

‘பார்’ மேலாளரிடம் ரூ.70 ஆயிரம் லஞ்சம் பெற்ற டாஸ்மாக் கடை ஊழியர்கள் இருவர் கைது

கோவையில் கூடுதல் விலையில் மது விற்க ‘பார்’ மேலாளரிடம் லஞ்சம் பெற்ற டாஸ்மாக் கடை விற்பனையாளர், உதவியாளர் ஆகியோரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்தனர்.

கோவை ஈச்சனாரியில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் (எண்:2232) விற்பனையாளராக லெனின் (43), உதவி விற்பனை யாளராக சரவணன் (50) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.

கடையை ஒட்டியுள்ள மதுக்கூடத்தில் (பார்) மேலாளராக இருப்பவர் வினோத்.

இந்நிலையில் லெனின், சரவணன் ஆகியோர், “கடையின் நேரம்போக மீதமுள்ள நேரங்களில் மதுபானங்களை அளிக்கிறோம். அவற்றை அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக விற்றுக்கொள்ளலாம். அதற்கு மாதந்தோறும் ரூ.70 ஆயிரம் தர வேண்டும்” என்று வினோத்திடம் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக கோவை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் ஆடியோ ஆதாரங்களுடன் வினோத் புகார் அளித்தார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் டி.எச்.கணேஷ் தலைமையிலான போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை வினோத்திடம் அளித்து, லெனின், சரவணன் ஆகியோரிடம் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர். அதை நேற்றுமுன்தினம் இரவு இருவரும் வினோத்திடமிருந்து பெறும்போது மறைந்திருந்த போலீஸார், கையும்களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, மதுபான கடையில் மேற்கொண்ட சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.8,600 தொகை பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில், மதுபானங் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பொள்ளாச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். லஞ்சம் தொடர்பாக புகார் தெரிவிக்க 0422-2449550 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்புகொள்ளலாம் என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x