Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

கிணற்றுக்குள் இறங்கிய தந்தை-மகள் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே கிணற்றில் தண்ணீர் எடுக்கச்சென்ற தந்தை, மகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு ஊராட்சி கீழுர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேந்தன் (40). இவர், தனது வீட்டின் அருகாமையில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க தனது மகள் லாவண்யா (17) என்பவருடன் நேற்று முன்தினம் சென்றார். கிணற்றின் படியில் நின்றபடி வேந்தன் கயிறு கட்டி குடத்தில் தண்ணீர் எடுத்தபோது தவறி கிணற்றுக்குள் விழுந்தார்.

அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்கினார். இதைக்கண்ட அவரது மகள் லாவண்யா தனது தந்தையை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்தார். தந்தையை மீட்க முயன்ற லாவண்யாவும் நீரில் மூழ்கினார். தண்ணீர் எடுக்கச்சென்ற தந்தை, மகள் வீட்டுக்கு வராததை அறிந்த அவரது குடும்பத்தார் கிணற்றுப்பகுதிக்கு வந்து பார்த்தபோது. அங்கு 2 பேரும் நீரில் மூழ்கியது தெரியவந்தது.

உடனே, திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு சென்ற கிராமிய காவல் துறையினர், தீயணைப்புத்துறையினரை வரவழைத்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x