Published : 29 Jan 2021 03:15 AM
Last Updated : 29 Jan 2021 03:15 AM

காட்பாடி ரயில் நிலையத்தில் தவற விட்ட 7 பவுன் நகை உறவினரிடம் ஒப்படைப்பு

காட்பாடி ரயில் நிலையத்தில் பெண் பயணி தவறவிட்ட நகை பையை ரயில்வே காவல் துறையினர் மீட்டு உறவினரிடம் ஒப்படைத் தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை உதவி ஆய்வாளர் எழில்வேந்தன், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், பெண் காவலர் சரளா ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று காலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதலாவது நடைமேடையில் சென்றபோது கீழே கிடந்த சிறிய பை ஒன்றை காவல் துறை யினர் எடுத்துப் பார்த்தனர். அதில், 7 பவுன் தங்க நகைகள், ஆதார் கார்டு இருந்ததைப் பார்த்தனர்.

காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு புறப்பட்ட பிருந்தாவன் விரைவு ரயிலில் சென்ற பெண் பயணி நகை பையை தவற விட்டது தெரியவந்தது. ஆதார் அட்டையில் இருந்த முகவரியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அதில், நகை பையை தவற விட்டது காட்பாடி விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜான் பீட்டர் என்பவரின் மனைவி சுகன்யா (29) என தெரியவந்தது.

பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வரும் ஜான் பீட்டர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், ஊருக்கு வந்திருந்த சுகன்யா மீண்டும் பெங்களூரு திரும்பும்போது ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நகை பையை தவறவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில், சுகன்யாவின் உறவினர் ஒருவர் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்துக்கு சென்று நகை பையை காவல் துறையினரிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x