

வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று 3,500 பருத்தி மூட்டைகள் ரூ.90 லட்சத்துக்கு விற்பனையானது.
சேலம் மாவட்டத்தில் பருத்தி அறுவடை சீசன் பரவலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாழப்பாடி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் புதன் கிழமைகளில் பருத்தி ஏல விற்பனை நடைபெற்று வருகிறது.
இங்கு சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற ஏலத்துக்கு 3,500 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில், டிசிஹெச் ரகம் மூட்டை அதிகபட்சம் ரூ.8,591-க்கும், குறைந்தபட்சம் ரூ.6,529-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் அதிகபட்சம் ரூ.8,260-க்கும், குறைந்தபட்சம் ரூ.7,309-க்கும் விற்பனையானது.
இதேபோல, ஆர்சிஹெச் ரகம் மூட்டை அதிகபட்சம் ரூ.6,549-க்கும், குறைந்தபட்சம் ரூ.5,169-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் அதிகபட்சம் ரூ.6,279-க்கும், குறைந்தபட்சம் ரூ.4,799-க்கும் விற்பனையானது. கடந்த வாரம் மொத்தம் 1,400 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.32 லட்சத்துக்கு விற்பனையானது. நேற்று 3,500 பருத்தி மூட்டைகள் மொத்தம் ரூ.90 லட்சத்துக்கு விற்பனையானது.