Published : 26 Jan 2021 03:18 AM
Last Updated : 26 Jan 2021 03:18 AM

தமிழுக்கும் தமிழர்களுக்கும் அதிமுக பக்க பலமாய் இருக்கிறது உளுந்தூர்பேட்டையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்

தமிழர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ பாதிப்பு ஏற்படும் போது உடனடி நடவடிக்கை எடுப்பது அதிமுக அரசு என உளுந்தூர்பேட்டையில் நேற்று நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்

கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் உளுந்தூர்பேட்டையில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர்.குமரகுரு வரவேற்றார். விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டத்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிசாமி,மொழிப்போர் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.பிரபு, அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் மோகன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் முதல்வர் பேசியது:

அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது, தமிழகப் பள்ளிகளில் மும்மொழித் திட்டத்தை எதிர்த்தார். தமிழ் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும்; இந்தி மொழி அறவே நீக்கப்படும் என 23-01-1968-ல் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற் றினார்.

அதேபோன்று 13-11-1986-ல்எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோதும் இருமொழிக் கொள்கைத் திட்டத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் இந்தி பேசாத மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்கக் கூடாது; திணித்தால் அந்த முயற்சியை முறியடிப்பேன் என்றார்.

தற்போதைய அதிமுக அரசும், மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில் மும்மொழித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இரு மொழிக் கொள்கை தான் என்பதில் உறுதியாக இருந்து, வரைவுத் திட்டத்திலிருந்த நீக்கவும் வலியுறுத்தியுள்ளது.

மொழிப்போர் தியாகியான கீழபழவூர் சின்னச்சாமிக்கும், சிதம்பரநாதனுக்கும் சிலை வைத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. மேலும் தபால் துறை தேர்வை தமிழில் நடத்த உறுதி செய்தது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முதன்முறையாக தமிழில் பெறப்பட்டது.

தமிழுர்களுக்கோ, தமிழ் மொழிக்கோ ஏதேனும் பாதிப்பு என்றால் அதனை களைய நடவடிக்கை எடுப்பதும், தமிழ்நாடு உருவான நாளான நவம்பர் 1-ம் தேதியை ஆண்டுதோறும் தமிழ்நாடு தினமாக கொண்டாட வழிவகை செய்ததும் அதிமுக அரசு மட்டுமே.

கீழடியில் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற அரிய பொருட்களை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் சிவகங்கை மாவட்டம் கொண்டலையில் ரூ.12.24 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற எண்ணற்றப் பணிகளை தமிழ் மொழிக்காக இந்த அரசு மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

நிகழ்வில் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், “தமிழகத்தின் நலனை அதிமுக அரசு ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. காவிரி, முல்லைப் பெரியார், கச்சத் தீவு பிரச்சினை உள்ளிட்ட ஜீவாதாரப் பிரச்சினைகளை மீட்டெடுத்தது அதிமுக அரசு ஸ்டாலின் தற்போது வேலேந்தி வேஷமிட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார். ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள்” என்றார்.கூட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர்பாண்டியன் எம்எல்ஏ, காட்டுமன்னார்கோவில் சட்டப்பேரவை உறுப் பினர் முருகுமாறன், பண்ருட்டி சட்டப்பேரவை உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம், விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் வி.டி.கலைச்செல்வன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x