செங்கானூரில் அடிப்படை வசதி செய்து தராததால் பிப்ரவரி 10-ல் வாக்காளர் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்ப மக்கள் முடிவு

செங்கானூரில் அடிப்படை வசதி செய்து தராததால்   பிப்ரவரி 10-ல் வாக்காளர் அட்டைகளை ஆளுநருக்கு அனுப்ப மக்கள் முடிவு
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள செங்கானூர் கிராமத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரோடை வசதி, பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், ஆழ்வார்குறிச்சியில் இருந்து செங்கானூர் செல்லும் வழியில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபடுவதால் மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும்நடவடிக்கை எடுக்காததால் பல்வேறுகட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாற்றுப் பாதைஅமைத்து தராததைக் கண்டித்து ஜனவரி 5-ம் தேதி வாக்காளர் அடையாள அட்டைகளை ஆளுநருக்கு அனுப்பும் போராட்டத்தை அறிவித்தனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் பேசி ஒரு வாரத்தில்நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.

இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று முன்தினம் இரவு ஊர் மக்கள் மீண்டும் கூடி ஆலோசனை நடத்தினர். தங்களது கிராமம் அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாளஅட்டைகளை பிப்ரவரி 10-ம் தேதிதமிழக ஆளுநருக்கு அனுப்பிவைக்க தீர்மானித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in