Published : 23 Jan 2021 03:17 AM
Last Updated : 23 Jan 2021 03:17 AM

மேலநீலிதநல்லுர் வட்டாரத்தில் மழையால் ஏற்பட்ட பயிர்ச் சேதம் வேளாண் அதிகாரிகள் குழு ஆய்வு

மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் தொடர் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை வேளாண் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் சுமார் 6,500 ஹெக்டேர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த உளுந்து மற்றும் பாசிப்பயறு உள்ளிட்ட பயிர்கள் மழையால் சேதமடைந்தன.

இந்நிலையில் வேளாண் இயக்குநர் அலுவலகத்தில் இருந்து வந்த மாநிலக்குழு மேலநீலிதநல்லூர் வட்டரத்தில் பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டது. தலைமையிடத்து துணை இயக்குநர் விஜயலட்சுமி தலைமையில், வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, மேலநீலிதநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் நயினார் முகம்மது, சங்கரன்கோவில் வருவாய் கோட்டாட்சியர் முருகசெல்வி, வட்டாட்சியர் திருமலைச்செல்வி, வேளாண் அலுவலர் அறிவழகன், துணை வேளாண் அலுவலர் ரவிசந்திரன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அனைத்து வருவாய் கிராமங்களிலும் கள ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்ப்பட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை பதிவு செய்து, இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களின் அடங்கல், பட்டா, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல்களுடன் பகுதி கிராம நிர்வாக அலுவலரை அணுகி உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

வேளாண் துறை, வருவாய்த்துறை கள அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, தகுதியான நபர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, இழப்பீட்டுத் தொகை கிடைக்க உரிய பரிந்துரை மேற்கொள்வார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x