Published : 21 Jan 2021 03:15 AM
Last Updated : 21 Jan 2021 03:15 AM

செம்மண் குவாரி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது பொன்முடி, கவுதமசிகாமணி எம்பி நீதிமன்றத்தில் ஆஜர்

செம்மண் குவாரி வழக்கில் பொன்முடி எம்எல்ஏ, கவுதமசிகாமணி எம்பி உள்ளிட்டோருக்கு கூடுதல் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.

வானூர் அருகே பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி எம்எல்ஏ, கவுதமசிகாமணி எம்.பி, ராஜமகேந்திரன், லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர்மீது கடந்த 2012-ல் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

இதுதொடர்பான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. லோகநாதன் இறந்துவிட்டதால் அவரது பெயர் இவ்வழக்கில் இருந்து நீக்கப் பட்டது.

இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது. பொன்முடி எம்எல்ஏ, கவுதமசிகாமணி எம்.பி, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத், ராஜமகேந்திரன் ஆகிய 6 பேரும் ஆஜராயினர். கோதகுமார் ஆஜராகவில்லை. அவர்சார்பில் வழக்கறிஞர் ஆஜராகிமனுதாக்கல் செய்தார். இதனையடுத்து பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகியோருக்கு 20 பக்கங்கள் கொண்ட கூடுதல் குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. பின்னர் வழக்கை விசாரித்த நீதிபதி இளவழகன், இந்த வழக்கின் விசாரணையை வருகிற 25ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

சொத்து குவிப்பு வழக்கு

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு பொன்முடி எம்எல்ஏ அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு நேற்று மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி எம்எல்ஏ ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x